பழம்பெரும் அட்ட ஈஸ்வரங்களின் ஒன்றான திரு நகேஸ்வரத்தின் எச்சமாக விளங்கும் இவ்வாலயம், நயினாதீவு ஸ்ரீ நாகபூசணியுடன் தொடர்புடைய கோவிலாகும். நாகம் பூஜித்தால் அம்பாள் நாக பூஜனி என்ற திருநாமம் விளங்க காரணமான எம்பெருமான் குடிகொண்ட இடம் புளியன்தீவாகும். இங்கு ஆதி நாகேஸ்வரம்
விளங்கியிருக்க வேண்டும் . அதுவே பின்னாளில் நாகதம்பிரான் என மருவி மீண்டும் அம்மை அப்பனின் விருப்பால் ஸ்ரீ நாகேஸ்வரம் என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது. பண்டைய அட்ட ஈஸ்வரங்கள் இராவணனால் சிவபூமியான இலங்கையை காக்கும் பொருட்டு எட்டு திக்கும் கடலோரமாக கட்டபட்டது. இச் சிவத்தலங்கள் காலத்தால் மறைந்தும், மருவியும் , நிலைத்தும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. அவையாவன வடக்கே ஸ்ரீ நகுலேஸ்வரம், திரு கேதீஸ்வரம் திரு நாகேஸ்வரம், கிழக்கே திரு கோணேஸ்வரம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரம்(மட்டகளப்பு-அமிர்தகழி தற்போது பிள்ளையார் கோவில் ), தெற்கே ஸ்ரீ தொண்டீஸ்வரம்(மாத்தறை -தற்போது விஷ்ணு கோவில் ), மேற்கே ஸ்ரீ முன்னேஸ்வரம்(சிலாபம் ), திரு நந்தீஸ்வரம்(இரத்மலானை -கொழும்பு ) என்பனவாகும். இவை காலத்திற்கு காலம் இயற்கை அனர்த்தம், அன்னிய படையெடுப்புகள், இராணுவ நடவடிக்கைகள் என்பவற்றால் அழிவுற்றும் சிதைவுற்றும் மருவி காணப்படுகின்றன.
பற்றை காடுகளான இத்தீவில் நல்ல மூலிகைகள் நிறைந்து காணபடுகின்றது. இதனால் பழைய காலம்தொட்டு முனிவர்களும் சித்தர்களும் இங்கு வந்து தியானம் செய்து சிவனை வழிபட்டுள்ளனர். அதன் வரிசையிலே பதஞ்சலி வியாக்கிரம பாதர் முதல் அனலை சித்தர் கதிரவேலு சுவாமி, நயினை சித்தர் முத்துக்குமார சுவாமி ஆகியோர் ஈறாக பலர் இங்கு வந்து சிவனை வழிபட்டு சென்றதாக இதிகாச மற்றும் வரலாற்று கதைகள் கூறப்படுகின்றது. இத்தீவில் மக்கள் குடிசைகள் அமைத்து வாழ விரும்பியபோதும் நள்ளிரவில் கேட்கும் மணியோசைகள், பாம்புகளின் நடமாட்டம் என்பன அவற்றை கைவிடச்செய்தன. இவ்வாறன நிகழ்வுகள் தேவர்களின் பூஜை என கருதும் கர்ண பரம்பரை கதைகள் இவ்வாலயம் மீதான பக்தி மேலீட்டை காட்டு கின்றது. இவ்வாலயத்தின் சிறப்பு யாது எனில் ஞாயிறு தோறும் இடம்பெறும் நாக மற்றும் சூரிய வழிபாடுகளாகும், நாகர் மற்றும் திராவிட வழிபாடுகளின் தொடர்ச்சியாக இவை இடம் பெற்று வருகின்றமை இவ்வாலய பழைமையை எடுத்துக்காட்டுகின்றது. எனவே அருவ வடிவான சிவன் சூரியனின் செம்மைக்கும் அதன் படைப்புக்கும் முதல் பரம்பொருளாகவும் விளங்கி, அருவுருவ வடிவில் லிங்கமாகவும் உருவடிவில் நாகமாகவும் அரச மரமாகவும் வழிபடப்படுகிறார்.
அனலைக்குமரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்